மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சுப்பர் பெயார் விற்பனை கண்காட்சி இன்று (24) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவிலுமிருந்து உற்பத்தியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு கண்காட்சி நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் ஆரம்பமான இந்த கண்காட்சியில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விற்பனை கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனிர் உட்பட மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய மட்ட பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்,உதவி திட்டங்கள்,மானிய அடிப்படையான வழங்கல்களை முன்னெடுத்துவரும் நிலையில் அவற்றின் மூலம் பெறப்படும் உற்பத்தி பொருள்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இவ்வாறான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் காண்காட்சிகள் நடாத்தப்பட்டுவருகின்றன.
இதன்மூலம் சிறு உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களுக்கான சந்தைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுடன் நுகர்வோர் குறைந்த விலைகளிலும் சிறந்த சுத்தமான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையிலும் இவ்வாறான கண்காட்சிகள் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த கண்காட்சியில் பெருமளவமான மக்கள் பார்வையிட்டு பொருட்களையும் கொள்வனவுசெய்வதை காணமுடிந்தது.









