தமக்குச் சொந்தமான சொகுசு பேருந்தை மொனராகலை – கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் தம்மிடம் இருந்து மாதாந்தம் 350,000 ரூபாய் கையூட்டல் பெற்றதாகக் குற்றக்குழு உறுப்பினர் ‘பெக்கோ சமன்’ வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த முன்னாள் தலைவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளார்.
தற்போது மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ‘பெக்கோ சமன்’, தனக்குச் சொந்தமான ரூபா 8 கோடிக்கும் அதிக பெறுமதியுள்ள, இரண்டு சொகுசு பேருந்துகளைக் கண்டுபிடிக்க கடந்த நாட்களில் குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு உதவினார்.

குறித்த இரண்டு பேருந்துகளில் ஒன்றைக் கொழும்பு – மொனராகலை வீதியில் இயக்க அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக, ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஒருவர், தம்மிடம் இருந்து மாதாந்தம் ரூ.350,000 கையூட்டல் பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
அந்த அனுமதிப்பத்திரம் கடந்த மார்ச் மாதம் காலாவதியான போதும், ‘பிரச்சினை ஏற்பட்டால், அதனைத் தாம் சமாளித்துக் கொள்வதாகக் குறித்த அதிகாரி ‘பெக்கோ சமன்’ தரப்பினருக்கு உறுதி வழங்கியதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பெக்கோ சமன் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மைத்துனர் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, கடந்த மாதம் கூட முன்னாள் தலைவரின் கணக்கில் குறித்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவருக்கு அவர் பதவி இழந்த பின்னரும், தாம் பணம் வழங்கியதாக ‘பெக்கோ சமன்’ கூறியுள்ளார்.








