கனடாவின் குடியேற்ற அமைப்பு முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்வதா சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் கல்வி மற்றும் பணி தொடர்பான விசா நிராகரிப்புகள் அதிகரித்து வருவதால் கனடாவின் குடியேற்ற அமைப்பு இவ்வாறு முன்னோடியில்லாத சவால்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியவர்களை வரவேற்பதில் தமது நவீன அடையாளத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் கனடா ஈடுபட்டுள்ள நிலையில், பெருமளவிலான மக்கள் கனடாவை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குறியேற்றம் தொடர்பிலான நீதிமன்ற வழக்குகளின் தாக்கமும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் (IRCC) புதிய தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் ஒகஸ்ட் வரை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 278,900 பேர் குறைவான மக்கள் கனடாவிற்கு வருகைத்தந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு, கனடா மனித உதவியுடன் கூடிய குடியேற்றத் திரையிடலுக்கு மாறியிருப்பது உள்நாட்டில் நியாயத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் நெருக்கடியைத் தூண்டியுள்ளது என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஒகஸ்ட் 2025 இல், 45,380 கல்வி வீசா அனுமதிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும், இது கடந்த ஆண்டில் 79,795 ஆக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அதே மாதத்தில் பணி அனுமதிகள் 26,075 லிருந்து 16,890 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் பெடரல் நீதிமன்றம் 2025 ஆம் ஆண்டில் 36,400 குடியேற்ற வழக்குகளை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 47% அதிகரிப்பு, மேலும் 2019 முதல் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேற்ற சட்டதரணிகளின் கருத்தின்படி, “இந்த அதிகரிப்பு நிர்வாக நியாயத்தில் வளர்ந்து வரும் நம்பிக்கையின்மையை பிரதிபலிக்கிறது.
ஒரு முடிவு நியாயமானதா என்பதை நீதிமன்றம் சரிபார்க்கிறது. இல்லையென்றால், அது வழக்கை வேறொரு அதிகாரிக்கு திருப்பி அனுப்புகிறது.
ஆயிரக்கணக்கான நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, குறிப்பாக சர்வதேச மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு, நீதித்துறை மதிப்பாய்வுகள் இப்போது ஒரே பயனுள்ள மேல்முறையீட்டு வழிமுறையாக மாறியுள்ளன” என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கனடாவின் 2026–2028 குடிவரவு நிலைத் திட்டம், எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, தற்காலிக குடியிருப்பாளர்களுக்கான வசதிகளின் குறைப்புகள் எவ்வளவு ஆழமாகச் செல்கின்றன என்பதை மேலும் திட்டம் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.








