இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து, இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக,கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்கு மாகாணத்தின் முக்கிய அபிவிருத்தித் தேவைகளைக் கருத்தில்கொண்டு அடையாளம் காணப்பட்ட 33 திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, ரூ.2,371.83 மில்லியனை (ரூ. 2.37 பில்லியன்) இந்தியா மானியமாக வழங்கவுள்ளது.

மேலும், இந்த 33 தனிப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக, இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் இடையே தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட, முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தப் பல்துறை திட்டமானது, உள்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி, பிராந்திய அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் தொடர்ச்சியான அபிவிருத்தி உதவிகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.








