ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நேற்று (03) இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்திய அரசின் அழைப்பின்பேரில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ள சஜித், புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோரைச் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சஜித் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் நேற்றுவரை நடந்திருக்கவில்லை.
இந்திய சந்திப்புகளுக்கு எதிர்க்கட்சித் தலைவருடன் முக்கியமான பிரதிநிதிகளை அழைத்துவர இந்தியத் தரப்பில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அப்படி எவரும் சஜித்துடன் செல்லவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் நிதிப் பொறுப்பாளர் என்று சொல்லப்படும் லக்ஷ்மன் பொன்சேகா, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட்டோரே இந்த விஜயத்தில் இணைந்துள்ளதாக அறியமுடிந்தது.

இது வெளிப்படையானதும் நடப்பு மட்டத்திலானதுமான சந்திப்பாக இந்திய தரப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டபோதும் இதனை மிக இரகசியமாக வைத்திருக்க சஜித் பிரேமதாச கருதியிருப்பதாக அறியமுடிந்தது. நேற்றுக் காலை சஜித்தின் பயணம் குறித்து அறிய ஊடகர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாக மட்டத்தினரைத் தொடர்புகொண்டபோதும் அவர்கள் எவரும் இதனை அறிந்திருக்கவில்லை. கட்சித்தலைவர் வெளிநாடு சென்றுவிட்டாரா என்று அவர்களே ஊடகர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.
தனது இந்த விஜயத்தின்போது தனது கூட்டணியிலுள்ள தமிழ்க் கட்சிகளின் தலைவர் ஒருவரையாவது சஜித் அழைத்துச் சென்றிருந்தால் இப்போதுள்ள நிலைமைகளை இந்தியாவுக்கு எடுத்துச்சொல்ல வாய்ப்பு இருந்திருக்குமென்று விசனம் தெரிவிக்கப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.
எவ்வாறாயினும், இம்மாத நடுப்பகுதியில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டு அரச எதிர்ப்புப் பேரணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்காத நிலையில் அக்கட்சியின் தலைமை மீது கூட்டணிக் கட்சிகள் கொண்டிருந்த விசனம் சஜித்தின் இந்திய விஜயத்துடன் மேலும் தீவிரமடைந்திருப்பதாக அறியமுடிந்தது.








