வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை செல்வம் அடைக்கலநாதனுக்கு சொந்தமான வாகனத்தில் நேற்றுமுன்தினம் (02) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தசம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் வாகனம் மன்னார் வீதியில் பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார சீரின்மை காரணமாக தீப்பரம்பல் ஏற்பட்டதாகவும் அறியமுடிகிறது.

இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்தசம்பவத்தின் போது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.








