மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா, கலைவிழா மற்றும் ஆங்கில பெஸ்டிவல் விழா என முப்பெரும் விழாக்கள் நேற்று (06) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் ஏ. எம். கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ. எல். சேட் ஆப்தீன் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CAFFE) அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மற்றும் சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் மாவட்ட பிரதிநிதி ஏ. எல். மீரா சாஹிப், மேலும் ஓய்வுபெற்ற ஆசிரியர் எம். ஏ. சீ. எம். ஹிபதுல்லாஹ் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஊடக அதிதியாக ஊடகவியலாளர் மற்றும் ஊடக வளவாளரான எஸ். சஜீத் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
விழாவின் போது மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வினோத உடை அணிவகுப்பை மேடையில் அரங்கேற்றி நிகழ்வை அலங்கரித்தனர்.
அத்துடன், சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் அமைப்பின் உதவித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட பிரதிநிதி ஏ. எல். மீரா சாஹிப் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
மேலும், வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் பிரதம அதிதி, கௌரவ அதிதிகள் மற்றும் ஊடக அதிதி ஆகியோரால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.














