சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞர், சமூக வலைத்தளத்தில் இஸ்லாமியர்களின் கண்ணியமிக்க இறுதி இறைதூதரான முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவு வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவூதி நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் அபராதமும் விதித்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் கதிர்காமத்தை நோக்கி சென்ற சுப்ரமணி எனும் நாயொன்றை அதுபற்றி அறியாத ஒரு இளைஞன் தாக்கிய விடயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இறுதியில் தாக்கிய இளைஞன் மன்னிப்பு கேட்டு, இலங்கைப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு 50,000 ரூபா பிணையில் வெளியில் வந்தார்.
அதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் நடந்த கருத்து மோதல்களின்போதே அனோஜன் என்னும் கல்முனையை சேர்ந்த சவூதி அரேபியாவுல் தொழில்புரியும் குறித்த இளைஞன் முஸ்லிம்கள் மீதான கோபத்தை காட்டுவதற்கு முஹம்மது நபி பற்றி தவறாக பேசினார்.
இந்த கருத்து அதிகம் பேசுபொருளான பின்னரே அவர் சவூதி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 3 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தன் குடும்பத்தின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற கனவுடன் வெளிநாடு சென்ற ஒருவரின் வாழ்க்கை, ஒரு கணத்தின் ஏற்பட்ட கவனக்குறைவு அல்லது முதிர்ச்சியற்ற முடிவால் முற்றிலும் மாறிப்போயுள்ளது. இது அவருடைய எதிர்காலத்திற்கும் அவரின் குடும்பத்திற்கும் மிகப்பெரிய மனவேதனையையும் எதிர்கால அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சமூக ஊடக உலகில், உணர்ச்சிகளைத் தூண்டி இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. சிலர் திட்டமிட்டு வெறுப்பையும் மத மோதலையும் தூண்டும் பதிவுகளைப் பரப்புகின்றனர். ஆனால் அதன் விளைவுகளைச் சந்திப்பது பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்டு செயல்படும் அப்பாவி இளைஞர்கள்தான்.
ஒரு சில நொடிகளில் தட்டச்சு செய்யப்படும் வார்த்தைகள், பல ஆண்டுகள் நீடிக்கும் துன்பத்திற்குக் காரணமாகலாம். எனவே சமூக வலைத்தளங்களில் எதையும் பகிர்வதற்கு முன் அதன் சட்ட, சமூக மற்றும் குடும்ப விளைவுகளை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
இந்தச் சம்பவம் ஒரு மதத்தைப் பற்றியதாக மட்டும் கருதப்படக் கூடாது. உலகின் அனைத்து மதங்களும் அவற்றின் புனித நபர்களும், வழிபாட்டுத் தலங்களும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளுடன் இணைந்துள்ளன.

எந்த மதத்தையும் அல்லது அதன் புனித அடையாளங்களையும் இழிவுபடுத்துவது கருத்துச் சுதந்திரம் அல்ல; அது மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
குறிப்பாக சவூதி அரேபியா உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் மத நிந்தனை மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பான சட்டங்கள் மிகவும் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன. அந்நாடுகளில் வாழ்பவர்கள் அந்நாட்டு சட்டங்களையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பது மிகவும் அவசியம்.
சமூக ஊடகங்களில் யாரேனும் தூண்டிவிடும் கருத்துகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு பதிலளிப்பதோ அல்லது பகிர்வதோ வாழ்க்கையைப் பெரும் சிக்கலுக்குள் தள்ளக்கூடும்.
எனவே, எந்த பதிவையும் வெளியிடும் முன் அது நமக்கும் நமது குடும்பத்திற்கும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்திப்பது அவசியம்.








