இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் தலைமையில் இயங்கும் டி-சிண்டிகேட் எனப்படும் குற்றக் கும்பலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே உருவாகி வரும் புதிய, அபாயகரமான கூட்டணியைக் குறித்து இந்திய புலனாய்வு அமைப்பு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தற்போது டி-சிண்டிகேட் தமது போதைப் பொருள் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் திட்டமாக தென்னிந்தியா மற்றும் இலங்கையை குறிவைத்துள்ளதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
குறித்த குழு தமது போதைப்பொருள் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் பழைய வலையமைப்பை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டி-சிண்டிகேட் நிதி உதவிகளையும் சர்வதேச அணுகலையும் வழங்கும் அதேவேளையில் விடுதலைப் புலிகளின் ஒரு குழுவினர் பாக்கு நீரிணை உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் குறித்த ஆழமான உள்ளூர் அறிவு மற்றும் தளவாட ஆதரவை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தலைமை மற்றும் நிதி இல்லாமல் போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு இந்த நிதி உதவி ஒரு பலமாக அமையும் என இந்திய புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிதியைக் கொண்டு அவர்கள் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது மற்றும் ஆயுதங்கள் வாங்குவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அஞ்சப்படுகிறது.
இப்ராஹிம் தாவூத்தின் மூலதனமும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளவாடத் திறனும் இணைவது தென்னிந்திய போதைப்பொருள் சந்தையில் ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அபாயகரமான இணைவாகும் என இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன.
இந்தநிலையில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பிற உளவுப் பிரிவுகள் இந்தக் கூட்டணியின் நிதி பரிமாற்றங்கள் மற்றும் தகவல் தொடர்புகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதுடன், தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவுகளைச் சுற்றி கடலோர கண்காணிப்புகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் இந்திய உளவுத்துறை அமைப்புகள் இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட்டிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையில் ஒரு புதிய கூட்டணி உருவாகியுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்போது, இலங்கையில் நடைபெறும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட செய்தி குறித்த தென்னிலங்கை ஊடகமொன்று எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.








