தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தால், அது வடக்குக் கிழக்கு மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும், மக்கள் கைகளில் அதிகாரம் செல்ல வேண்டாம் என விரும்பும் கட்சியாக தமிழ் மக்களால் கருதப்படும் நிலை உருவாகும் என்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட தலைவரான இரா. துரைரெட்னம் தெரிவித்தார். வவுணதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய புதிய வரவு செலவுத் திட்டம் வீண்விரயமும் ஊழலும் இல்லாதது பாராட்டத்தக்கது என்றாலும், வட–கிழக்கு பகுதிகளுக்கு தேவையான விசேட கவனம் வழங்கப்படாதது கவலையாக உள்ளதாக கூறினார்.
கிழக்கு மாகாணத்திற்கு இந்த ஆண்டு சுமார் 1050 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் நிதி கடந்த வருடத்திலிருந்து பெரிதாக உயரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்பட்ட சாலைகள் சேதமடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளதாகவும், இவற்றை மீள்பரிசீலித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒப்பந்தகாரர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டக்களப்பில் முதலீடு செய்ய முன்வராதது மேலும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.

வடக்கு–கிழக்கு மாகாணங்களில் இதுவரை ஐந்து நியதிச் சட்டங்களே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாகாணங்களில் 80–க்கும் மேற்பட்ட நியதிச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதை அவர் ஒப்பிட்டார். நியதிச் சட்டங்கள் உருவாக்கப்படுவதிலேயே மக்கள் காலடிக்கு அதிகாரம் செல்லும் வாய்ப்புகள் விரிவடைகின்றன; எனவே மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துவது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பாதுகாக்கும் ஒரே வழி என்று கூறினார்.
தேசிய மக்கள் சக்தி கடந்த கால ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட கட்சியாக தமிழ் உணர்வுகளையும் ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் அரசியலமைப்பில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள மாகாணசபை முறையை அமுல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கமாக இருப்பதால், தேர்தல் முறையில் தேவையான சிறிய திருத்தத்தை பாராளுமன்றத்தில் 10 நிமிடங்களில் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் நல்லாட்சி, ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு போன்றவற்றை முன்னிறுத்திக் கூறும் நிலையில், அடுத்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை உடனடியாக எடுத்து செயல்படுத்த வேண்டும் என்று துரைரெட்னம் நம்பிக்கை தெரிவித்தார்.








