2009 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரியில் சேருவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் இருப்பினும் அவர் சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் இங்கிலாந்தில் இருந்து சட்டப் பட்டம் பெற்ற விதம் அவரது சான்றிதழ் மற்றும் சட்டக் கல்லூரியில் சேருவது தொடர்பான தகவல்கள் பல வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் நிர்மலா கன்னங்கராவின் புலனாய்வு முடிவுகளை மேற்கோள்காட்டி, ராஜபக்சவின் லண்டன் நகர பல்கலைக்கழக பட்டம் அவர் சேர்க்கை பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்ச தனது சட்டப் பரீட்சைகளை ஒரு தனியார் வகுப்பறையில் எழுதியதாகவும் அவரது நகரப் பல்கலைக்கழக பட்டப்படிப்பில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்சவின் லண்டன் நகரப் பல்கலைக்கழகப் பட்டம் 2009 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் சேருவதற்கான தகுதி கொண்டிருக்கவில்லை என் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








