நேற்று முன்தினம் (18) கன்னியாகுமாரி மற்றும் அதனையொட்டிய பகுதியில் காணப்பட்ட தாழமுக்க பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து நேற்று காலை லக்ஷதீவு மற்றும் மாலைதீவு பிராந்தியத்தில் மாறன் மண்டலத்தின் (Troposphere) நடுப்பகுதி வரை காணப்படுகின்றது.
இதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனை ஒட்டிய பிராந்தியத்தில் மாறன் மண்டலத்திற்கு கீழே ஒரு காற்று சுழற்சி உருவாகி உள்ளது.
இது எதிர்வரும் 22ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்க பகுதியாக (Low Pressure Area) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 24ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்கமாக (Depression) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்பின்னர் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனை ஒட்டிய கடல் பிராந்தியத்தில் அதனை அடுத்து வரும் 48 மணித்தியாலத்தில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது பின்னர் வட இலங்கையின் கரையோரம் வந்து வட தமிழ்நாட்டு பகுதிக்கு நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதே வேள மேலும் சில தகவலின்படி இந்த தாழமுக்கமானது இலங்கையின் தென்கிழக்கு கரையோரமாக வந்து, அதன் பின்னர் இலங்கையின் கிழக்கு கரை ஓரமாக நகர்ந்து,
அதன் பின்னர் வட இலங்கை ஓரமாக சென்று தமிழ்நாட்டை அடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் அல்லது 22ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு தொடர்ச்சியான மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிரேஷ்ட வானிலை அதிகாரி
சூரியகுமார்








