உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் அவர்கள் கடந்த 29.11.2025ம் திகதி சனிக்கிழமை கிளி/பரந்தன் இந்து மகாவித்தியாலயநலன்புரி நிலையத்தில் மாலை 06.10 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாநன் இளங்குமரன் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர்கள் ஒரு வாரத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து தங்களது கடமைகளை மேற்கொள்ள தீ்மானித்துள்ளனர்.

ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையினரின் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொதுமக்களுக்கான மனித நேய பணிகளை வழங்க வேண்டியதன் அவசியம் காரணமாக ஒருவாரத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு செல்வதாகவும் நியாயமான சட்டரீதியான தீர்வுகள் கிடைக்காதவிடத்து மேலதிக செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தீர்மானிக்கவும் பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும் கிராம அலுவலர்கள் நேற்று (01) மேற்குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு பட்டி அணிந்து கடமைகளுக்குச் சென்றிருந்தனர்.








