சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணிக்கும், ஹரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமான ஆட்டம் இன்று பி.ப 2.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகிறது.
ஏழு ஆண்டுகளின் பின் இரு அணிகளுக்குமிடையில் இலங்கை மண்ணில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.
கடந்த வியாழக்கிழமை(22) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 19 ஓட்டங்களினால் வெற்றியீட்டிய நிலையில், கடந்த சனிக்கிழமை(24) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களினால் இலகுவெற்றியீட்டி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.

இந்நிலையில் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று (27) பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று 11 ஆண்டு தாகத்தை தனிக்கும் முனைப்பில் உள்ளது.
அதாவது, இலங்கை அணி இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை மண்ணில் வைத்து 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரை 5-2 என்ற அடிப்படையில் கைப்பற்றியதன் பின்னர் இதுவரையில் 11 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரை வெல்லவில்லை.
2014ஆம் ஆண்டின் பின் 3 ஒருநாள் தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில் அது மூன்றிலும் இங்கிலாந்து அணியே வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.








