கடந்த வருடம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் 15 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 13 சம்பவங்களுக்கு கசிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்துள்ளதாக வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருடம் 20 வயதுக்குட்பட்ட நான்கு பேர் தற்கொலை செய்துள்ளதுடன், அவர்களில் மூன்று சம்பவங்களில் கசிப்பு தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தகவல்கள், நேற்று (30) மாலை நடைபெற்ற மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு மீளாய்வுக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டன. குறித்த கூட்டம், வவுணதீவு பிரதேச செயலாளர் திருமதி ந. சத்தியானந்தியின் ஒழுங்கமைப்பில், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், டாக்டர் இ. சிறிநாத், மண்முனை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கோபாலபிள்ளை, பிரதித் தவிசாளர், அரச திணைக்களங்களின் தலைவர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில், முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், நிறைவேறாத தீர்மானங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது, அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் யானை அட்டகாசங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என விவசாய அமைப்புகளும் பிரதேச சபைத் தவிசாளரும் தெரிவித்தனர். இதனையடுத்து, யானைகளை குடியிருப்பு பகுதிகளில் இருந்து காட்டு பகுதிகளுக்கு அப்புறப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் யானை வேலிகள் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அதேநேரம், வவுணதீவு மற்றும் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் கசிப்பு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் காரணமாக சமூக சீர்கேடுகள் மற்றும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வருடம் மட்டும் இரண்டு சிறுவயதினர் தற்கொலை செய்துள்ளதாகவும், அந்தப் பகுதியில் இன்னும் சில இளைஞர்கள் கசிப்புக்கு அடிமையாகியுள்ள நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் அபிவிருத்தித் திட்டங்கள் பயனற்றவையாகும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த பொலிஸாரும் சமூக அமைப்புகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகவல் வழங்கும் முறைமை தொடர்பில் மேல் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த பொலிஸார், சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், சட்டவிரோத மண்கடத்தல், வீதிகளில் அலையும் கட்டாக்காலி மாடுகள், பிரதேச வீதி அபிவிருத்தி, குடிநீர் பிரச்சினைகள், விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இதனிடையே, எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து நெற்களஞ்சிய சாலைகளும் திறக்கப்பட்டு நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அறிவித்தார்.














