கிராமிய சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமுதாய நீர்வழங்கல் திட்டங்களின் நிலைபேற்றுத்தன்மையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தால் 2019/2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ‘சமுதாய நீர் அபிமானி’ வேலைத்திட்டத்தின் கீழ் 367 கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அவற்றின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு இயலாமல் போயுள்ள 175 கருத்திட்டங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
ஆனாலும், குறித்த கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தில் தற்போது போதியளவு தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், குறித்த 175 கருத்திட்டங்களில் தாமதிக்காமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய 48 கருத்திட்டங்களின் வேலைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில், அக்கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்குத் தேவையான சாத்தியவளக் கற்கைகள்/பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அடிப்படைத் திட்டம் மற்றும் விபரங்களுடன் கூடிய பொறியியல் திட்டத்தைத் தயாரித்தல், பெறுகை ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் கருத்திட்டக் கண்காணிப்பு போன்ற தொழிநுட்பச் சேவைகளை 2026-2027 காலப்பகுதியில் மகாவலி ஆலோசனைப் பணியகத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








