Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவாட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை; ஜனாதிபதி

சட்டவாட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை; ஜனாதிபதி

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் என்றும் தெரிவித்தார்.

நேற்று (11) பிற்பகல் நுவரெலியாவில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

நாம் அனுபவித்த துன்பங்களை நமது பிள்ளைகள் அனுபவிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும், எந்தவொரு பிள்ளையும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பலியாகாத நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இந்த வேலைத்திட்டத்தின்போது பொறுமையாக காத்திருக்க யாருக்கும் நியாயமான உரிமை இல்லை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, இவ்விடயத்தில் தன்னைப் பற்றி தான் உறுதியளிப்பதாகவும்,மதத் தலைவர்கள், அரசியல் அதிகாரம், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என்ற வகையில் அனைவருக்கும் உள்ள பொறுப்புகளை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க தேசிய அளவிலான அரசியல் தலைமை, செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மற்றும் பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு செயல்படுத்தப்படுகிறது.

அந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு பரந்த பிரச்சாரத்தின் ஊடாக சமூகத்தில் இந்த அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய வலையமைப்பை அகற்றவும், புனர்வாழ்வு வாய்ப்புகளை வலுப்படுத்தவும், போதைப்பொருள் பயன்பாட்டைக் கைவிட விரும்புவோருக்கு வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மலையக மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பரவலான விழிப்புணர்வு பொறிமுறையின் மூலம் அந்த மக்களை அதிலிருந்து விடுவித்து அவர்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மாகாண வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 91,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதோடு,1818 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் நீண்டகால விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 1566 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இக்குறுகிய காலத்தில் இலங்கை பொலிஸார் ஆற்றிய தீவிர பங்களிப்புக்காக நுவரெலியா மாவட்டத்தில் கடமையாற்றிய 62 பொலிஸ் அதிகாரிகள் இதன்போது ஜனாதிபதியின் கைகளினால் பாராட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க:

இங்குள்ள அனைவரும் பல்வேறு பொறுப்புகளை வகிப்பவர்கள். நாம் எத்தகையை தொழிலில் ஈடுபட்டாலும் அனைவருக்கும் நாட்டைப்பற்றி எதிர்பார்ப்பு உள்ளது.

பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் எதிர்பார்ப்பு உள்ளது. அது என்ன? இருப்பதை விட சிறந்த நாடாக மாற்ற வேண்டும். எமது பிள்ளைகளுக்கு இதனை விட சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இது தான் எம் அனைவருக்கும் உள்ள எதிர்பார்ப்பாகும்.

அந்தப் பயணத்தில் நாம் பல துறைகளில் வெற்றிகளை ஈட்ட வேண்டும். பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். எமக்கு எவ்வாறான பொருளாதாரம் உரித்தானது என்று அனைவரும் அறிவோம்.

30 வருடங்களாக யுத்தத்தினால் தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக கூறினோம். யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களின் பின்னர் நாடு வங்குரோத்து அடைந்தது. உண்மையான காரணம் யுத்தமல்ல.

நாம் பின்பற்றிய பொருளாதார கொள்கையும் மோசடிகளும் இலஞ்ச ஊழல்களும் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாக அமைந்தன. அவ்வப்போது பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணங்களை கூற முயன்றோம்.

எமது பொருளாதார பின்னடைவுகளை பல்வேறு காரணங்கள் காட்டினோம். சிலவேளை யுத்தத்தையும் சிலவேளை இயற்கை அனர்த்தங்களையும் தொற்றுநோய்களையும் காரணங்காட்டினார்கள்.

வீழ்ச்சிகளுக்கு காரணம் தேடினார்கள். ஆனால் எந்த நிலைமைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய பொருளாதரத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த காலத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யுத்தம் வெடிக்கும் நிலை ஏற்பட்ட போது எமது நாடு வீழ்ச்சியடையும் என கருதினார்கள். மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்ட போது எமது நாடு வீழும் என நினைத்தார்கள். அமெரிக்கா எமது நாட்டுக்கு வரிவிதித்த போது நாடு வீழ்ச்சியடையும் என்றார்கள்.

டித்வா புயலினால் ஏற்பட்ட போது எமது நாடு சரிவடையும் என்று கருதினார்கள். அவ்வாறான எந்தவொரு நிலைமையிலும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் நாம் பணியாற்றுகிறோம்.

டித்வா புயல் நிலைமையில் நாடு பின்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பலமாக முன்னோக்கிச் செல்லும் வகையில் நிதி ஒழுங்கையும் பொருளாதாரத்தையும் தயார்படுத்தினோம்.

உலக வங்கி அறிவித்துள்ளவாறு 4.1 பில்லியன் டொலர் என கணிப்பிடப்பட்டுள்ளது. 1.2 டிரில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது எமது நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் சுமார் 4% ஆகும். எமது பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கம் ஏற்படாத வகையில் ஏற்பட்ட சேதத்தை தாங்கிக் கொள்ளும் வகையிலான பொருளாதாரத்தை நாம் உருவாக்கினோம்.

50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை இந்த டித்வா சூறாவளி அனர்த்தத்தில் இருந்து மீள்வதற்காக ஒதுக்கினோம். அதற்காக ஒரு சதம் கூட கடன் வாங்கவில்லை. பணம் அச்சிடவில்லை.எமது திறைசேரிக் கணக்கில் 120 000 கோடி பணம் இருந்தது. அதில் 50 000 கோடியை இதற்காக ஒதுக்கினோம்.

நாம் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். பலமான பொருளாதாரத்தை நோக்கிய திசைக்கு செல்கிறோம். அடுத்ததாக எமது நாட்டில் பலமான வெளிநாட்டுக் கொள்கைக்குப் பிரவேசிக்க வேண்டும்.

உலகில் வெளிப்படையாக அமைதியாக இருப்பது போல தோன்றினாலும் உள்ளுக்குள் மோதலுடன் கூடிய உலகமே காணப்படுகிறது. வர்த்தக சந்தையை பகிர்வதில் யுத்தம் நடைபெறுகிறது.

இந்த மோதல் நிறைந்த உலகில் எமது நிலைகளை பாதுகாத்து எந்தத் தரப்பின் பக்கமும் சாயாது சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். இது எமது நாட்டை கட்டியெழுப்புவதில் முக்கியமான காரணியாகும்.

எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு பலமான அரச சேவை அவசியம். முன்னேற்றகரமான மற்றும் பலமான அரச சேவையை உருவாக்க அயராது பாடுபடுவோம். டிஜிட்டல்மயமாக்கல், அரச தேவைக்கு அவசியமான உபகரணங்களை வழங்குதல், வாகனங்கள் வழங்கி சிறந்த அரச சேவையை உருவாக்க வேண்டும்.

அரச சேவையை ஈர்ப்புள்ள இடமாக மாற்ற வேண்டும். 2025 இல் அரச சேவை சம்பளத்தை உயர்த்துவதற்காக 11 ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்கினோம். 2026 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்குவதற்காக மேலும் 11 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம்.

சம்பள உயர்வின் மூன்றாம் கட்டத்திற்காக 2027 இல் மேலும் 11 ஆயிரம் கோடி செலவாகும். சம்பள உயர்விற்காக மாத்திரம் 33 ஆயிரம் கோடி செலவிட வேண்டும். அரச சேவையை ஈர்ப்புள்ள இடமாகவும் அரச சேவைக்கு திருப்தியான வாழ்வையும் வழங்கும் நோக்கம் எமக்குள்ளது.

2027 மூன்றாவது சம்பள உயர்வை வழங்கிய பின்னர் வரவு செலவுத்திட்ட செலவுகள் குறித்து கவனம் செலுத்தி எஞ்சிய கொடுப்பனவுகள் தொடர்பில் ஆராய்வோம். நாட்டை கட்டியெழுப்புவதற்கு பலமான அரச பொறிமுறை அவசியம்.

அடுத்து சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பிரஜையொருவருக்கு அநீதி நடந்தால் அவர் எங்கு செல்ல வேண்டும். அவர் பொலிஸிற்குச் செல்வார். தனக்கு நடந்த அநீதிக்கு அவர் நீதியை எதிர்பார்ப்பார்.

அவர் நீதிமன்றத்தை நாடுவார். அநீதிக்கு நீதியை எதிர்பார்ப்பார். அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்ட சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் இது மிகவும் அத்தியாவசியமானது.

எனவே சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம். சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. சட்டம் சிலந்திவலையைப் போன்றது என்பார்கள். சிறிய விலங்குகள் சிக்கிக் கொள்ளும் பெரியவை தப்பித்துக் கொள்ளும் என்பார்கள். இவ்வாறு தான் பொதுமக்கள் மத்தியில் சட்டம் தொடர்பான நம்பிக்கை காணப்படுகிறது.

ஆனால் நாட்டை கட்டியெழுப்புவதற்கு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். ஒருவருக்குள்ள அதிகாரம் ,செல்வம் என்பவற்றினால் சட்டத்தில் இருந்து தப்ப முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கக் கூடாது. பணம், அதிகாரம் இருந்தால் மட்டுமன்றி நியாயமாக சட்டம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு எழவேண்டும்.

சட்டம் தன்னிடம் வர முடியாது.தன்னிடம் அதிகார வளையம் இருக்கிறது என சட்டத்தை புறக்கணிக்கும் சிலர் இருந்தார்கள். அவ்வாறான நாட்டினால் முன்னோக்கிச் செல்ல முடியாது. அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். சட்டத்திற்கு அஞ்ச வேண்டும்.

அந்த நிலை எமது நாட்டில் இல்லை. 2026 ஆம் ஆண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர்கொடுக்கும் வருடமாக இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன். அனைவரும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும். சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் முன்னேறியது கிடையாது.

சட்டம் வீழ்ச்சியடைந்த இடத்தில் குற்றவாளிகளின் அதிகாரம் மேலோங்கியிருக்கும். சட்டம் இல்லாத இடத்தில் குற்றவாளிகள் உச்சத்தில் இருப்பார்கள். இது தான் நிஜம். அவ்வாறான நாட்டினால் முன்னேற முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்திய நாட்டை உருவாக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,அமைச்சின் செயலாளர், பொலிஸ் மாஅதிபர்,முப்படை அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.

கருப்பு நாடுகள் பற்றி அறிந்திருப்பீர்கள். சட்டத்தின் வீழ்ச்சியே அந்த நாடுகளில் காணப்படுகின்றன. சட்டம் வீழ்ச்சியடைந்த இடத்தில் குற்றவாளிகள் நீச்சலடிப்பார்கள்.சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் நாட்டை நாம் உருவாக்குவோம். எமக்கு எவ்வாறான நாடு தேவை.

நாம் பெற்ற துன்பங்களை எமது பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது. நாம் எதிர்கொண்ட சவால்களை எமது பிள்ளைகளும் முகங்கொடுக்காத நாடு அவசியம். இதில் நாம் எதிர்கொள்ளும் பிரதான சவால் எமது பிள்ளைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பதாகும். நான் முன்பு குறிப்பிட்ட விடயங்கள் முக்கியமானவை என்ற போதும் அவை அனைத்தையும் வெற்றி கொண்டாலும் பயனிருக்காது.

கிராமம் கிராமமாக இதனை ஒழிக்க வேண்டும். சில காலத்தினுள் இதனை சாதிக்க முடியும் என நான் கருதவில்லை. இதற்கு சில வருடங்கள் நீடிக்கக்கூடிய, பின்வாங்காத நீண்டகால வேலைத்திட்டம் அவசியம்.

போதைப்பொருள் நாட்டிற்குள் வரும் வழிகளை நாம் முடக்க வேண்டும். அதற்காக குறிப்பாக கடற்படையினர் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். அண்மையில் கடற்பரப்பில் பாரியளவு போதைப் பொருட்களை கடற்படை கைப்பற்றியது. அதேபோல் நிலப்பரப்பில் விநியோகிக்கப்படும் வலையமைப்பை முடக்குவோம்.

அதற்காக எமது பொலிஸார் அதிரடிப்படையுடன் இணைந்து சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பாரிய பணியை ஆற்றி வருகின்றனர்.இதனுடன் தொடர்புள்ள குற்றவாளிக் குழுக்களை கைது செய்ய வேண்டும். பலர் கைதாகியுள்ளனர்.

பலர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கைது செய்யவேண்டும். அதேபோல், இதனால் பாதிக்கப்பட்டவர்களை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாடு முழுவதும் புனர்வாழ்வு நிலையங்களை அமைப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எமது மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் அனைவரையும் இணைந்து ஒரு தேசிய சபை நிறுவப்பட்டுள்ளது. அதில் பரந்தளவில் ஆராயப்படுகிறது. போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவருக்கு மீண்டும் அவரது வாழ்வை பெற்றுக்கொடுக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

உங்கள் உறவினர் ஒருவர் அடிமையான குடும்பத்திற்குச் சென்று பாருங்கள். நண்பரின் வீட்டுக்குச் சென்று பாருங்கள். தற்பொழுது அடிமையானவரை புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் வாழும் நாம், இந்த பேரழிவு குறித்து நன்கு அறிந்துள்ள நாம், இதிலிருந்து எமது பிள்ளைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நாம் முன்வராவிட்டால், வேறு யார் முன்வருவார்கள்? இதனை நாமே செய்ய வேண்டும். எனவே, நாம் ஒன்றிணைந்து இந்தப் பேரழிவைத் தோற்கடிப்போம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆளுமை கொண்டவர் மஹிந்த ராஜபக்ஷ- ஈழத்தை பெறுவதற்காகவே தமிழ் டயஸ்போராக்கள் NPPக்கு பணம் கொடுத்தனர்; அர்ச்சுனா
அரசியல்

ஆளுமை கொண்டவர் மஹிந்த ராஜபக்ஷ- ஈழத்தை பெறுவதற்காகவே தமிழ் டயஸ்போராக்கள் NPPக்கு பணம் கொடுத்தனர்; அர்ச்சுனா

June 14, 2026
மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி
செய்திகள்

மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி

June 14, 2026
மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை
காணொளிகள்

மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை

June 14, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி

June 14, 2026
தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அரசியல்

தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

June 14, 2026
நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச
அரசியல்

நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச

June 14, 2026
Next Post
நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.