அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஜனாப் முஹம்மத் ரியால் முஹம்மத் ஸியாத் அவர்களை கௌரவிக்கும் விசேட பாராட்டு விழா கண்டி, பொல்கொல்ல, வத்தேகெதர க/வ/ அல் சபா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஜனாப் ஸியாத் அவர்களின் இல்லத்திலிருந்து பாடசாலை வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவர், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரின் வரவேற்பைப் பெற்றார்.
நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர், தேசிய மட்டத்தில் YMMA பேரவைக்கு தலைமை தாங்கும் முன்னாள் மாணவராக ஸியாத் தெரிவாகியிருப்பது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், சமய மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அகில இலங்கை YMMA பேரவையின் பிரதி தலைவர் ஜனாப் N.M. நிஃப்ராஸ், வத்தேகெதர YMMA உறுப்பினராகத் தொடங்கிய ஸியாத் அவர்களின் சமூகப் பணிப் பயணம் தேசிய தலைமைத்துவம் வரை உயர்ந்த விதம் குறித்து சிறப்புரையாற்றினார்.

இதன்போது ஜனாப் ஸியாத் அவர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் கௌரவ விருதுகள் வழங்கப்பட்டன.
பதிலுரையாற்றிய ஜனாப் ஸியாத், தனது வெற்றிக்கு அடித்தளமிட்ட பாடசாலை, ஆசிரியர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினருக்கு நன்றி தெரிவித்து, இளைஞர்கள் தலைமைத்துவத்திலும் சமூக சேவையிலும் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்ததுடன், சமூக சேவையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக இந்த பாராட்டு விழா அமைந்தது.









