மட்டக்களப்பு மாவட்டத்தின் காரமுனை மற்றும் மாங்கேணி பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய நில உரிமையும் இருப்பும் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த காலங்களில் தரகு அரசியலில் ஈடுபட்ட அரசியல்வாதி ஒருவர், மாங்கேணியில் இருந்த மக்களிடம் உறுதிப் பத்திரங்களை பெற்றுத் தருவதாக கூறி மக்களிடமிருந்து நகல் ஆவணங்களை பெற்றுச் சென்ற போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அந்த ஆவணங்கள் மீள வழங்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.
வடக்கில் மணலாறு பகுதி குறிவைக்கப்பட்டதைப் போன்று, இன்று காரமுனை மண் திட்டமிட்டு இலக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது சட்டவிரோத காடழிப்புகள் மற்றும் மக்கள் அமைதியை குலைக்கும் செயல்கள் மூலம் அச்சுறுத்தல் தொடர்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் அவர்களுக்கு சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்து, மக்களின் நில உரிமையை மீட்டுத் தர வலுவான கோரிக்கை முன்வைத்தன.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் மாங்கேணி தெற்கு கிராம அலுவலகர் பிரிவுக்கு நேரடியாகச் சென்று மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, சில அரச அதிகாரிகளின் ஊழல் செயற்பாடுகள் மற்றும் பணத்திற்காக குழப்பங்களை உருவாக்கும் உள்ளூர் குழுக்கள் குறித்து மக்கள் கவலை வெளியிட்டனர். மேலும், பெண் சமூக செயற்பாட்டாளர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், ஊழல் தொடர்பான செயற்பாடுகளை ஆவணப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் உரிய முறைப்பாடுகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். 14.02.2026 அன்று மேற்கொள்ளப்பட்ட கள விஜயத்தின் போது, சட்டவிரோத காடழிப்பு பகுதிகளை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு இடையூறும் அச்சுறுத்தலும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








