நாட்டில் போர் முடிவுக்கு வந்து நீண்ட காலம் கடந்த போதிலும், மக்களின் மனங்களில் இன்னும் முழுமையான அமைதி உருவாகவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மன்னார் அடம்பன் பகுதியில் நடைபெற்ற மகளிர் சந்திப்பில் உரையாற்றிய அவர், யுத்தம் மற்றும் வன்முறைகளால் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், இனவாத அரசியலுக்கு எதிராக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும், திருட்டு, ஊழல் மற்றும் வீண் விரயங்களை கட்டுப்படுத்தி பொருளாதாரம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போதைப்பொருட்கள் நாட்டின் எதிர்கால சந்ததியை அழிக்கும் அபாயமாக இருப்பதால், அவற்றை முழுமையாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கூறிய பிரதமர், தற்போது சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படுவதாக வலியுறுத்தினார்.
அத்துடன், கல்வி துறையில் சீர்திருத்தங்கள், ஆசிரியர் நியமனங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் தரமான பாடசாலைகள் உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த மாற்றங்களை முன்னெடுத்து செல்ல பெண்கள் முன்வர வேண்டும் என்றும், இனவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.








