பயிர்ச்செய்கை மற்றும் சொத்துப் பாதுகாப்பிற்காக விநியோகிக்கப்பட்ட 25,064 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களில் (Gun Permits), 12,971 அனுமதிப்பத்திரங்கள் கடந்த காலப்பகுதியில் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட செயலகங்களினால் வெளியிடப்பட்ட காலாண்டு அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் இந்த அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையில் பாரிய வித்தியாசம் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையின் விபரங்களில்,
விசாரணை அறிக்கைகளின்படி, இந்த 25,064 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களும் 1995 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களில் 7,125 உரிமங்கள் 2024 டிசம்பர் 31 ஆம் திகதி வரை புதுப்பிக்கப்படவில்லை (Renewal) என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் துப்பாக்கிக் கட்டளைச் சட்டத்தின் (Firearms Ordinance) பிரகாரம், துப்பாக்கியொன்றை வைத்திருப்பதற்கும் அல்லது பயன்படுத்துவதற்கும் முறையான அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயமாகும்.
பயிர்ச்செய்கை மற்றும் சொத்துப் பாதுகாப்பிற்காக கடந்த காலங்களில் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒரு தொகுதி, பாதாள உலகக் குழுக்கள் அல்லது ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் கைகளுக்குச் சென்றிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








