மட்டக்களப்பில் இன்று (28) சனிக்கிழமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி மற்றும் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் புதிய “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு” எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது. கல்லடி பாலத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்தி பூங்கா வரை சென்றது.
தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமாரின் அழைப்பின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர் சிறிநாத், இரா.சாணக்கியன், க. கோடீஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி மற்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்கள், காணாமல் போன உறவுகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இதில் கலந்தனர்.
ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டமும் வேண்டாம், அரசை பாதுகாக்கும் புதிய சட்டமும் வேண்டாம், நாட்டில் உள்ள குற்றவியல் சட்டமே போதும், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பெயரில் இழந்த உயிர்கள் போதாதா?” எனக் குறிக்கும் சுலோகங்கள் ஏந்தப்பட்டு கோஷம் எழுப்பப்பட்டது.
ஊர்வலம் அரசடி வீதி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய வீதியைக் கடந்து காந்தி பூங்காவை அடைந்தது. அங்கு பகல் 11.30 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிக்கை பிரகணம் செய்ததையடுத்து திரும்பினர்.













