திருகோணமலை உப்புவெளி, சாம்பல்தீவு பகுதியில் நேற்று (01.03.2026) இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி சாம்பல்தீவு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே திடீரென தீப்பற்றத் தொடங்கியுள்ளது. வாகனத்தில் இருந்து கரும்புகை கிளம்புவதைக் கண்ட சாரதி உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தனர். எனினும், தீ மிக வேகமாகப் பரவியதால் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சாம்பலாகியது. எரிபொருள் நிலையத்திற்கு மிக அருகில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட மின்கசிவு (Power leak) காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர் ஆபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








