அரச நிர்வாகத்தில் நேரடி அரசியல் தலையீட்டை பிரஜா சக்தி ஊடாக அரசாங்கம் மேற்கொள்வதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி தளவாய் கிராமத்தில் மீனவர்கள் உடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சியாளர்களால்,அமைச்சர்களால், அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. இதனால் அரச அதிகாரிகளால் சுதந்திரமாக பணியாற்ற முடியாது உள்ளது. இதனை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்றுவோம் என்று மக்களிடம் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று பிரஜா சக்தி என்ற ஒன்றை கொண்டு வந்து, அரச நிர்வாகத்தில் தங்களது கட்சி அரசியலை நேரடியாக செய்து வருகிறது.
மக்களுக்கு பணியாற்றுவதற்காக அரச நிர்வாகத்தில், கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல அரச உத்தியோகத்தர்கள் இருக்கின்றனர். மறுபுறம் மக்களால் ஜனநாயக ரீதியாக அரசில் யாப்பின் பிரகாரம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வரை இருக்கும் போது. அவற்றை எல்லாம் புறந்தள்ளி தங்களது கட்சி அரசியலை செய்வதற்காக அரசாங்கம் ஒரு சுற்று நிருபத்தின் ஊடாக பிரஜா சக்தி என்ற ஒன்றை கொண்டு வந்து அரச நிர்வாகத்தில் தனது நேரடி அரசியல் தலையீட்டை மேற்கொள்கிறது.
இதனால் அரச உயர் அதிகாரிகள் எமது கிராமங்களில் நடைபெறும் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு அந்த கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட வட்டார உறுப்பினர்களை புறக்கணித்து பிரஜா சக்தி அமைப்புக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.

இந்த பிரஜா சக்தி அமைப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள் பதவி வழியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் குறித்த பிரஜா சக்தி அமைப்பானது முழுக்க முழுக்க தேசிய மக்கள் சக்தி அரசின் கட்சி சார்பானதாகவே உள்ளது.
இதனால் இந்த அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், பயனாளி தெரிவுகள் கட்சிக்கு சார்பானதாகவே இருக்கிறது. இவ்வாறு தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவாக எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளை நிர்ப்பந்திக்கும் சுற்று நிரூபமாக பிரஜா சக்தி சுற்று நிரூபம் அமைந்துள்ளது. இதனால் கிராம மட்ட அபிவிருத்திகள், நிவாரண உதவிகள் பக்கட்சார்பானதாகவே நடைபெறுகின்றன.
அத்தோடு அண்மையில் இலங்கையின் பிரதேச செயலாளர்கள் சங்கம், பிரதேச செயலாளர்கள் மீது நேரடி அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் காணி விடயத்தில் அமைச்சுக்களின் செயலாளர்களின் கடித தலைப்பில் அனுப்பபடும் கடிதங்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும், இது அரச நிர்வாகத்தில் நேரடி அரசியல் தலையீடாக இருப்பதால் இதனை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் அரச நிர்வாகத்தில் நேரடி அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதால் அரச உயர் அதிகாரிகளினால் சுகமாகவும், சுதந்திரமாகவும் செயற்பட முடியாமல் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் நடாத்தப்படும் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு தமிழரசுக் கட்சியின் வட்டார உறுப்பினர்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் அந்த அளவுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.








