மட்டு மாநகரசபை அமர்வில் பிரைஜா சக்தி திட்டம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கிடையே பெரும் சர்ச்சை
மட்டக்களப்பு மாநகர சபையில் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வரும் பிரஜா சக்தி திட்டத்தில் மாநகரசபை ஆளும் கட்சி உறுப்பினர்களை உள்வாங்கப்படவில்லை என தமிழரசு கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநரசபையின் 8 வது சபையின் 11 பொதுக் கூட்டம் மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கிய நாதன் தலமையில் நேற்று வியாழக்கிழமை (05) சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த சபை அமர்வில் தேசிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி திட்டத்தில் மாநகரசப எல்லைக்குள் உள்ள வட்டாரங்கள் அமைக்கும் போது தமிழரசு கட்சி மாநகரசபை உறுப்பினர்களை உள்வாங்காது, தேசிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்களை மட்டும் உள்வாங்கி அந்த குழுவை அமைத்து வருவதாக தமிழரசு கட்சி மாநகர சபை உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உரையாற்றினர்.
இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் எல்லா இனங்களையும் சமத்துவமாக நடாத்தி வருவதாகவும், பிரஜா சக்தி குழு அமைக்கும் போது அந்த பகுதி ஆலயங்கள் தேவாலயங்கள் ஊடாக அறிவித்தல் வழங்கி, 14 நாட்கள் அவகாசம் வழங்கி, கட்சி பேதமின்றி அந்த குழுவை அமைத்து வருவதாக தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து மாநகர சபையை ஆளும் தமிழரசு கட்சிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையே பெரும் வாக்குவாதங்கள் சுமார் ஒரு மணித்தியாலயத்துக்கு மேல் தொடர்ந்து, அமளி துமளி இடம்பெற வந்த நிலையில், பிரஜா சக்தி திட்டத்தில் அபிவிருத்தி தொடர்பாக வரும் போது எமது உறுப்பினர்களையும் உள்வாங்க முடியும் என மாநகரசபை முதல்வர் தெரிவித்து அந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்தார்.








