உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை எம்மால் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:
“மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பதற்றமான சூழல் முழு உலகிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகும். குறிப்பாக, கடல்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை மேற்கொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் இது பெரும் சவாலாக மாறியுள்ளது.

உலகச் சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால், விலைகள் உயருவது இயல்பான ஒன்று.
இந்த விலை உயர்வை உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் நிலையில், நாமும் அந்தத் தாக்கத்தைச் சுமக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது யாராலும் தடுக்க முடியாத ஒரு நிலைமையாகும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஏற்கனவே உலக சந்தையில் விலை அதிகரிப்பு பதிவாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கையின் இறக்குமதிப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.








