இலங்கை கடற்பரப்பில் ஈரான் கடற்படை கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்ததை வன்மையாக கண்டிப்பதுடன், அந்த கடற்படையினரை மனிதாபிமான முறையில் காப்பாற்றிய இலங்கை பாதுகாப்பு படைக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக தமிழரசு கட்சி மட்டு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் 8வது சபையின் 11 பொதுக் கூட்டம் மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் வியாழக்கிழமை (05) சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பில் ஈரான் கடற்படை கப்பலை தாக்கி அழித்தது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களை அந்த இடத்தில் மனிதாபிமான முறையில் காப்பாற்றிய இலங்கை பாதுகாப்பு படைக்கு வாழ்த்துக்கள்.
எங்களுடைய இனம் ஓரளவுக்கு நிமிர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த இனம் கடுமையாக இலங்கையில் அழிக்கப்படுவதற்கு பாதிக்கப்படுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் இன்று நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி இருந்தபோதும் அவர்கள் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் கிடைக்க வேண்டும்.
ஒரு பழமொழி உள்ளது அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று எனவே அதை வஞ்சனையாக கூறாமல் அங்கு இறந்த சிறுவர்களின் புகைப்படங்களை பார்க்கும் போது மிகவும் மன வேதனையாக இருக்கின்றது என்பதுடன் எதிர்வரும் காலம் உலக நாடுகளில் சமாதானம் தேவை அந்த சமாதானத்தின் ஊடாக இலங்கையில் பாதிப்புக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்றார்.








