இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தவிருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேல் நிலப்பரப்பை நோக்கி ஈரான் ஏவுகணைகளை செலுத்தியதாக இஸ்ரேல் இராணுவம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.
முதல் எச்சரிக்கைக்குப் பிறகு எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என அவசர மருத்துவ உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவப் படைகள் விரைவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று (21) ஜெருசலேமில் உள்ள புகழ்பெற்ற மசூதியான அல் – அக்ஸா மசூதி அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் வான்வழியில் மறிக்கப்பட்ட போதும் ஏவுகணையின் பாகங்கள் மசூதிக்கு மிக அருகே விழுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி சமூக வலைதளங்களில் காணொளிகளைப் பகிர்ந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் துறை, “ஈரானின் ஏவுகணை தாக்குதலின் விளைவுகள் இவை. ஜெருசலேமின் மசூதிக்கு அருகே ஈரானின் ஏவுகணை பாகங்கள் விழுந்துள்ளன. மீண்டும் ஒரு முறை பொதுமக்கள் வாழும் பகுதிகள், புனித தலங்களின் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் நாட்டை அழிக்கும் நோக்கத்தில் நேர்மையற்ற முறையில் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது” என குற்றம்சாட்டும் வகையில் பதிவிட்டனர்.
ஜெருசலேம் மற்றும் தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா மற்றும் அராத் நகரங்களின் மீது நேற்று (21) ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலில் அவசரநிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.








