மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில், பொலிசாரின் கவனயீனம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளது என குற்றம் சாட்டி, செங்கலடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான வனேந்திரன் சுரேந்திரன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மகஜரில் அவர் குறிப்பிட்டதாவது, கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தை உலுக்கும் வகையில் தொடர் குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் இடைவிடாது நடைபெற்று மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
இதற்கான சில முக்கிய சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2026 பிப்ரவரி 05ஆம் திகதி மத்திய பேருந்து தரிப்பு நிலையத்தில் வயதான பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் வழங்கி திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 28ஆம் திகதி 40ஆம் கிராமத்தைச் சேர்ந்த நளாயினி என்ற பெண் மயக்க மருந்து வழங்கப்பட்டு நகைகள் அபகரிக்கப்பட்டதுடன் கொலை செய்யப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
மேலும் 2026 மார்ச் 19ஆம் திகதி தாய் மற்றும் குழந்தை கடத்தப்பட்டு, அவர்களிடம் இருந்த நகைகளை அபகரித்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே குழுவினரால் தொடர்ச்சியாக குற்றச்செயல்கள் நடைபெற்று வந்த போதிலும், சம்பந்தப்பட்ட பொலிசார் எந்தவித துரிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்தது கடும் பொறுப்பற்ற தன்மையாகும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றச்செயல்கள் ஒன்றரை மாத காலத்திற்கு மேலாக நீடித்தபோதும் அவற்றை தடுக்கத் தவறியுள்ளமை, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்பதைக் காட்டுவதாகவும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் மட்டக்களப்பு நகர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வெல்லாவெளி, வவுணதீவு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மீது முழுமையான விசாரணை நடத்தி, அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டாலேயே எதிர்காலத்தில் இதுபோன்ற கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் கடமைகளை செய்ய தவறிய உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு, இச்சம்பவத்திலும் அதேபோன்று உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மகஜரின் பிரதிகள் பொது பாதுகாப்பு அமைச்சருக்கும் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








