மட்டக்களப்பு: நெல்லிக்காடு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடனும், மற்றொருவர் சடலமாகவும் மீட்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி, நேற்று (30) கொழும்பு – வத்தளைப் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதே இடத்தில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட 40 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதோடு, குறித்த இளம் தாயின் 3 வயது சிறுமியும் வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த வவுணதீவு பொலிஸார், 24 மணித்தியாலங்களுக்குள் காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் உட்பட ஐவரைக் கைது செய்தனர். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் மயக்க மருந்துகளை வழங்கிய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இதன்போது கார், முச்சக்கர வண்டிகள் மற்றும் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், இந்தத் திட்டமிட்ட கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்ட ‘சிவா’ எனப்படும் திவாகரன் (49 வயது) என்ற மருந்து ஏஜென்ட் அடையாளம் காணப்பட்டார். வத்தளைப் பகுதியைச் சேர்ந்த இவர், கொள்ளையர்களுக்கு மயக்க மருந்துகளை வழங்கியதுடன் அவர்களை இயக்கி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவரை நேற்று இரவு வத்தளையில் வைத்து கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைக்காக மட்டக்களப்பிற்கு அழைத்து வந்துள்ளனர்.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








