சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட யானைத் தந்தங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கருதப்படும் சுமார் 3 அடி நீளமுடைய இரண்டு யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் பாட்டாளிபுரம் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த யானைத் தந்தங்கள் எவ்வாறு பெறப்பட்டன, யானை வேட்டையாடப்பட்டதா அல்லது இயற்கையாக இறந்த யானையிலிருந்து எடுக்கப்பட்டதா, மேலும் இதன் பின்னணியில் அமைந்துள்ள குழு தொடர்பான தகவல்கள் குறித்து சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர்கள் விரைவில் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
இலங்கையில் யானைத் தந்தங்களை வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்பட்ட குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.








