இலங்கையில் நோன்பு, ஹஜ் மற்றும் பெருநாள் போன்ற முக்கிய மத நிகழ்வுகளுக்கான பிறை அறிவிக்கும் அதிகாரத்தை அரசு திணைக்களமான முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மட்டுமே கையில் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தத்தமது மத விவகாரங்களை நிர்வகிக்க அந்தந்த மத ஆலயங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதன் அடிப்படையில், கொழும்பு முஸ்லிம்களின் விவகாரங்களுக்காக கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை (ACJU) உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்றும், 1920களில் அது ஆரம்பிக்கப்பட்ட போதும் பிரித்தானியர் அதற்கு எந்த அதிகாரமும் வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1950களுக்குப் பிறகு வானொலிப் பயன்பாடு அதிகரித்தபோது, கொழும்பு பெரிய பள்ளியின் அறிவித்தல் நாடு முழுவதும் பரவியது. பின்னர், அ.இ. ஜம்மியத்துல் உலமா அரசு அங்கீகாரம் பெற்ற பிறகு மத விவகாரங்களில் தலையிடத் தொடங்கியபோது, பிறை அறிவித்தல் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிணக்குகள் ஏற்பட்டன. 1970களில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்காகத் தனி அமைச்சு உருவாக்கப்பட்ட போதிலும், அரசியல் காரணங்களால் அது நேரடியாகத் தலையிடாமல் தவிர்த்து வந்தது. 2000ஆம் ஆண்டுகளில் இந்த மூன்று தரப்பினரும் ஓர் உடன்பாட்டுக்கு வந்து, வானியல் கணிப்பின்படி அரசு தயாரிக்கும் காலண்டரைப் பின்பற்றியே பிறை முடிவுகளை அறிவித்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ள நிலையில், இந்த அமைப்புகள் மக்களை ஏமாற்றி வருவதாகவும், காலண்டரில் இல்லாத நாட்களில் பிறை தென்பட்டாலும் அதைத் தட்டிக்கழிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, இனிமேல் மக்களை ஏமாற்றாமல், அரசாங்கத்தின் வானியல் அறிவித்தலின் பிரகாரமோ அல்லது நவீன சாதனங்கள் மூலம் மேகங்களுக்குப் பின்னால் இருக்கும் பிறையைக் கண்டோ அறிவிக்க வேண்டும் எனவும், இல்லையேல் முன்னேற்றமடைந்துள்ள பல நாடுகள் பின்பற்றுவதைப் போல மக்கா பிறை அறிவித்தலைப் பின்பற்றுவது குறித்து அரசு ஆராய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








