மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக இலங்கையில் கட்டிட நிர்மாணப் பொருட்களின் விலைகள் இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்துள்ளன. சந்தையில் நிலவும் இந்தத் திடீர் விலையேற்றம் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடு காரணமாகச் சாதாரண மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு மூடை சிமெந்தின் விலை 2,100 ரூபாவைக் கடந்துள்ளதுடன், சந்தையில் அதன் தெரிவுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கியூப் ஆற்று மணலின் விலை மார்ச் மாத தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் 20 வீதம் அதிகரித்துள்ளது. (1ஃ4 கியூப் மணல் தற்போது 8,500 – 9,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது).
வளைகுடா நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியான செய்திகளையடுத்து, அலுமினியத்தின் விலை மேலும் உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
16-கேஜ் உருக்குக் கம்பிகள் பிராண்டுகளுக்கு ஏற்ப 2,750 முதல் 3,125 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.
மொரட்டுவை மர வியாபாரிகள் தேக்கு, பலா மற்றும் மஹோகனி போன்ற மரங்களின் விலைகளை உயர்த்தியுள்ளனர். 3ஃ4 அங்குல தேக்கு மரம் ஒரு அடி 1,500 ரூபாவாகவும், பலா மரம் 920 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறிய ரகப் பொருட்களான ஆணிகள் (ஒரு அங்குல கொன்கிரீட் ஆணி – 130 ரூபா) மற்றும் கதவுப் பூட்டுகள் (பேரல் போல்ட் – 585 ரூபா) போன்றவற்றின் விலைகளும் சில்லறை கடைகளில் கணிசமாக உயர்ந்துள்ளன.
தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டாரிங்டன் பால் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
இரும்பு விலையை 25,000 – 30,000 ரூபாவால் அதிகரிப்பது ஒரு ‘மாஃபியா’ போன்றது எனச் சாடியுள்ளார். மூன்று கியூப் மணலின் விலை தற்போது 150,000 ரூபாவைத் தாண்டியுள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 2,000 சதுர அடி கொண்ட (3 படுக்கையறைகள்) ஒரு சாதாரண வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 34.9 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓடுகள் மற்றும் அலுமினியச் சந்தையில் நிலவும் ஒரு சில நிறுவனங்களின் ஆதிக்கம் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் இந்த ஆண்டு 630 பில்லியன் ரூபா பெறுமதியான கட்டுமான ஒப்பந்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், மூலப்பொருட்களின் இந்த அதீத விலையேற்றம் அரச திட்டங்களையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








