குருவிச்சை ஆற்றினை மறித்து அணைக்கட்டொன்றை அமைப்பதன்மூலம் சிறுபோக நெற்செய்கையினை அதிகளவில் மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தித்தருமாறு முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், பெரிய இத்திமடு கமக்கார அமைப்பைச் சார்ந்த விவசாயிகள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.
பெரிய இத்திமடு கமக்கார அமைப்பின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் விவசாயிகளால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போது பெரிய இத்திமடு குளத்தின்கீழ் 80ஏக்கர் வரையில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படு வருவதாகத் தெரிவித்த விவசாயிகள், குரிவிச்சை ஆற்றினை மறித்து அணைக்கட்டு அமைக்கப்பட்டால் 120 தொடக்கம் 130ஏக்கர் வரையில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளமுடியுமென இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், உடனடியாக ஒட்டுசுட்டான் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருடன் தொலைபேசியில் உரையாடியதுடன், விவசாயிகளின் அணைக்கட்டு அமைப்பது தொடர்பான குறித்த கோரிக்கைத் தெரியப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து குறித்த அணைக்கட்டு அமைப்பதுதொடர்பில் எழுத்து மூலமான கோரிக்கையை தம்மிடம் கையளிக்குமாறு விவசாயிகளிடம் கோரிய பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த அணைக்கட்டை அமைப்பது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.









