பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், “பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம்” ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு நேற்று (27) அவ்வைத்தியசாலையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில், ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பொத்துவில் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும், தன்னார்வக் குருதிக் கொடையாளர்களும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் குருதி வழங்கினர்.
இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியத்தின் ஸ்தாபகரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.அப்துல் வாஸித், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறுக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


குறித்த இரத்ததான நிகழ்வினை ஓய்வுபெற்ற மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.எஸ்.எம்.அப்துல் மலீக் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவசர சத்திர சிகிச்சைகள் மற்றும் விபத்துக்களின் போது நோயாளிகளின் உயிரைக் காக்க இவ்வாறான இரத்ததான முகாம்கள் பெரும் பக்கபலமாக அமைகின்றன. சமூக அக்கறையுடன் முன்வந்து குருதி வழங்கிய இளைஞர்களின் செயல் பாராட்டத்தக்கதாகும்.








