உயிர்த ஞாயிறு தாக்குதல் செய்திகளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் எந்த வித பாதுகாப்பு பொறிமுறையும் இல்லை என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் 21 வது நினைவு தினத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருபத்தொரு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் குற்றவாளிகள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஊடகவியலாளர்களுக்கான நீதி என்பது இலங்கையைப் பொறுத்தவரை எட்டாக்கனியாகவே உள்ளது.
இலங்கையில் சுமார் 43 ற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதில் சுமார் 35 ற்கு மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் மிக முக்கியமானவர் ஊடகவியலாளர் சிவராம்.

அவரின் படுகொலை என்பது தமிழ் சமூகத்தின் குரலை இல்லாமல் செய்திருந்தது.
மிக முக்கியமாக தமிழ் மக்கள் சார்பான சர்வதேச மனித உரிமைக்கான குரலை இல்லாமல் செய்துள்ளது.
ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை சர்வதேச,தமிழ் ஊடக அமைப்புக்கள் காலம் காலமாக கோரி வருகின்றனர்.
ஆனால் உள்ளக பொறிமுறை ஊடாகவே குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என்று இலங்கை அரசு தொடர்ச்சியாக கூறி வருகிறது.
இன்று இருபத்தொரு ஆண்டுகளாகியும் சிவராமை கடத்தி படுகொலை செய்தவர்களை இது வரை கண்டுபிடித்து தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளது.
தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கான விசாரணைகளை உள்ளகப் பொறிமுறை ஊடாக மேற்கொள்ளப் போவதாகவும், சர்வதேச விசாரணை பொறிமுறைகளை தாம் நிராகரிப்பதாக ஐ. நா மனிதவுரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்தனர்.
இன் நிலையில் தற்போது ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட இலங்கையின் அதி உயர்மட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகள் வரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

சம்பவத்துடன் தொடர்வு பட்ட பலர் சாட்சிகளாக மாறியுள்ளனர்.
சாட்சிகளாக மாறிய பலருக்கு உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருவதாக பொலீசார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கும், ஊடகவியலாளர்களை கடத்தி படுகொலை செய்தவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கையின் அதியுச்ச அதிகாரத்தில் இருந்தவர்களை நோக்கி நகரும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை தடுத்து நிறுத்த அல்லது திசை திருப்பும் நோக்கோடு பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாள் சிலர் தங்களுக்கு எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.
இன் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு தற்போது பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பல உண்மைகளை ஆரம்பத்திலேயே வெளிக்கொண்டு வந்தவர்கள் ஊடகவியலாளர்கள் தான்.
உதாரணமாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான சாரா ஜஸ்மீன் என்கிற புலஸ்தினி என்ற பெண் தப்பிச் சென்றுவிட்டாரா? என்ற செய்தியை முதல் முதலில் உலகத்திற்கு கொண்டு சென்றவர்கள் மட்டக்களப்பில் உள்ள சில ஊடகவியலாளர்களே.

அந்த செய்தியை பிரசுரித்த ஊடகவியலாளர்களை அப்போது இருந்த புலனாய்வு துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை செய்து அச்சுறுத்தல் விடுத்தோடு குறித்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களின் பெயரில் விசாரணைகள் என்ற போர்வையில் பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
இருந்தும் குறித்த ஊடகவியலாளர்கள் ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் தொடர்ச்சியாக பல முக்கிய நபர்களின் சாட்சிகளை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வந்தனர்.
குறித்த செய்திகளை எல்லாம் பொய் என்று புறந்தள்ளிய உள்ளூர், சர்வதேச ஊடக நிறுவனங்கள் இன்று அந்த செய்திகளைதான் உண்மைகள் என வெளியிட்டு வருகின்றனர்.
சாட்சிகளாக மாறிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அரசாங்கம் அந்த சாட்சிகள் ஊடாக உண்மைகளை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை.
எனவே உடனடியாக அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு குறித்த ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். அத்துடன் அவர்களை பாதுகாப்பதற்கு உள்ளூர் சர்வதேச ஊடக அமைப்புக்கள் மிக முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.








