கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) இடம்பெற்றுது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது
இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் களனிவெளி ரயில் பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர, பிரதான ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகமை, கரையோர ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை முதலாவது கட்டமாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டம் என்பன குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் திட்ட அமுலாக்கத்தின் போது எதிர்நோக்கக்கூடிய சவால்கள் குறித்தும் இதன் போது விரிவாகக் ஆராயப்பட்டது.
தற்போதுள்ள ரயில் சேவைக்கு இணையாக மின்சார ரயில் சேவைகளை முன்னெடுப்பதுடன், தற்போதுள்ள அகலப் பாதைகளுக்கு பதிலாக நியமப் பாதைகளாக ரயில் தண்டவாளங்களை புனரமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.








