எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், பொய்களைக் கூறினாலும், சேறு பூச முற்பட்டாலும் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் நேயமிக்க அரசாங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நாங்கள் ஞாபகமூட்டிக் கொண்டிருக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தாசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நாளை மே மாதம் முதலாம் திகதி உலகத் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. முதற்கட்டமாக எமது தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாகவும், நாங்கள் இம்முறை 21 மாவட்டங்களிலே எமது ஊழியர்களை, தொழிலாளர்களை ஒன்று சேர்த்து இம்முறை மே தினக் கூட்டத்தினை நாங்கள் கொண்டாட இருக்கின்றோம்.

மட்டக்களப்பிலும் காந்தி பூங்காவிலே நாளை மதியம் 12 மணி அளவில் எமது தோழர் சுனில் ஹந்துனெத்தி அவர்களின் தலைமையிலே இந்தக் கூட்டம் இடம்பெற இருக்கின்றது. ஆகவே இந்த காலகட்டத்திலே ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தி என்று சொல்லக்கூடிய சஜித்தின் தலைமையிலான எதிர்க்கட்சியினரும் தாங்கள் ஒன்று சேர்ந்து உழைப்பாளர் தினத்தை கொண்டாட இருப்பதாக, மே தினத்தை கொண்டாட இருப்பதாக அவர்கள் ஆரம்பத்திலே குறிப்பிட்டிருந்தார்கள்.
பின்னர் அவர்களுக்கு இடையே இடம்பெற்ற அந்தப் போட்டியிலே யார் இந்தத் தொழிலாளர் தினத்தை வெற்றி கொள்ளப் போகின்றோம் என்ற உட்கட்சிப் போட்டியோ தெரியவில்லை, இன்று அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து, இன்னொருவர் மக்களுக்கு ‘போயா’ தினத்தை முன்னிட்டு தன்சல் வழங்கப்போவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இன்னும் ஒரு தரப்பினர் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே, இவர்கள் ‘ஒன்றிணைந்த எதிர்க்கட்சி’ என்ற போர்வையின் கீழே ஒன்று சேர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக, அரசாங்கத்தின் நல்ல செயல்பாடுகளை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கத்திற்கு எதிராகப் பல கருத்துக்களையும் பொய்களையும் கூறி மக்களைத் திசைதிருப்ப முற்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று இந்த ஒரு மே தினக் கூட்டத்தைக் கூட ஒன்று சேர்ந்து, ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகளாகச் செயல்படுவதற்கு அவர்களால் முடியாமல் சென்றிருக்கின்றது.
ஆகவே கடந்த காலங்களில் இவர்கள் தான் மக்களுக்காகப் போராடினவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முற்பட்டுக் கொண்டிருந்தவர்கள். ஆனால் இன்று இவர்கள் ஒன்று சேர முடியாத நிலைமையிலே அவர்களுக்குள்ளே ஒரு உட்பூசல் இருந்து கொண்டிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியை எடுத்துக்கொண்டால், ரணில் விக்கிரமசிங்க இதிலே பயன்பெறப் போகின்றார் என்பதை அவர் ஒரு பக்கம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார். இன்னொரு பக்கம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாச அவர்கள், அவரா இதிலே போட்டியில் வெற்றி கொள்ளப் போகின்றார் அல்லது மக்கள் பலத்தைச் சேர்க்கப் போகின்றார் என்பதைத் தங்களுக்குள்ளே ஒரு இடித்துக் கொள்கின்ற அல்லது போட்டி போடுகின்ற ஒரு நிலைமையில்தான் இருக்கின்றார்களே தவிர, மக்களைப் பற்றிச் சிந்திக்கின்ற ஒரு எதிர்க்கட்சிகளாக இரு தரப்பினரும் எப்போதுமே இருக்கவில்லை என்பது இதன் மூலம் புலனாகின்றது.
ஆகவே இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதும் எங்களது அமைச்சர்கள் மீதும் எப்படியான புகார்களை முன்வைத்திருந்தாலும், பொய்களைக் கூறியிருந்தாலும் மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். ஆகவே இந்த அரசாங்கத்தின் மீதும் மக்கள் இப்பவும் தங்களது நம்பிக்கையை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது மாத்திரமல்ல இந்தத் தொழிலாளர் தினத்திலும் கூட அணி அணியாகத் திரண்டு மக்கள் வந்து எங்களோடு இணைந்து பயணிக்கத் தயாராக இருக்கின்றார்கள்.
இதன் மூலமாக ஒன்று தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது. இந்த எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், பொய்களைக் கூறினாலும், சேறு பூச முற்பட்டாலும் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்; மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் நேயமிக்க அரசாங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நாங்கள் ஞாபகமூட்டிக் கொண்டிருக்கின்றோம். மக்களின் பக்கமே நாங்கள் மக்களுக்காகச் சேவை செய்கின்ற ஒரு தரப்பினராகத் தொடர்ச்சியாக நாங்கள் இருந்து வருகின்றோம் என்பது வெளிப்படையாகப் புலனாகிக் கொண்டிருக்கின்றது.”








