மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில், வயல் நிலமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (11.05.2026) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சரவனமுத்து பாலசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 08ஆம் திகதி வீட்டிலிருந்து சென்றவரவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வயல் பகுதியொன்றில் இவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.








