அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தை தமிழர் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் கிராமப்புற மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தனர்.
மேலும், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
அதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி குறைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








