நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக, மலையகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் வீதிகள் தெளிவாகத் தெரிவதில்லை. இதனால் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எட்டியாந்தோட்டை, கித்துல்கலை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவை, போடைஸ், கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, நாகசேனை, டயகம, இராணிவத்தை, மஸ்கெலியா, நல்லத்தண்ணி, பூண்டுலோயா, கொத்மலை, றம்பொடை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவை, வெலிமடை, அட்டாம்பிட்டி, ஹாலிஎல, பதுளை, பசறை, பிட்டமாருவ, ரோபேரி, லுணுகலை, மொனராகலை மற்றும் மஹியங்கனை வழியாகக் கண்டி வீதி, ஸ்பிரிங்வெலி வீதி, கம்பளை முதல் பேராதனை வழியாக நுவரெலியா வீதி, உடபுஸ்ஸலாவை முதல் வெலிமடை வீதி, பலாங்கொடை முதல் பதுளை வீதி, ஹட்டன் முதல் இராவாணாகொடை வரையிலான வீதி, பத்தனை முதல் நாவலபிட்டி வரையிலான வீதி, ஹப்புத்தளை முதல் வெலிமடை வரையிலான குறுக்கு வீதி உள்ளிட்ட பல பிரதான மற்றும் குறுக்கு வீதிகள் கடும் மூடுபனியால் சூழப்பட்டுள்ளன.
வீதிகள் தெளிவின்றி காணப்படுவதால், சாரதிகள் தமது வாகனங்களின் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை (Fog lights) ஒளிரவிட்டவாறு பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு எச்சரிக்கைகளைக் கவனித்துச் செயல்படுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








