வடகிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது
செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி அரசியலை முன்னெடுத்து வருவதாக
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையிலையே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஊழல் முறைகேடுகளை ஒழிக்கப் போகிறோம் என வாக்குறுதி வழங்கி வந்த தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தில் பல முறைகேடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

தெற்கில் ஒரு சிலரை கைது செய்தாலும் வடகிழக்கிலுள்ள ஊழல் அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி
அரசாங்கம் கைது செய்யாது.
அதற்கு வலுவான காரணம் இருக்கிறது அதாவது வடகிழக்கில் தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்த மக்கள்
ஆணையை வராத நிலையில் ஊழல் அதிகாரிகளை வைத்து தமது கட்சி சார்ந்தவர்களின் நலனை
பாதுகாப்பதே அவர்களின் திட்டம்.
கடந்த தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தியினர் சுமார் 80 ஆயிரம் வாக்குகளை
பெற்று மூன்று ஆசனங்களை பெற்றார்கள்.
உண்மையில் கடந்த காலங்களில் அரசாங்கக் கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வாக்களிக்கும் தமிழ் மக்களில்
ஒரு பகுதியினர் வழங்கி வந்த வாக்குகளில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே தேசிய மக்கள்
சக்திக்கு கிடைத்தது.
தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை அற்றத்தன்மை கடந்த தேர்தலில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையால்
தேசிய மக்கள் சக்தியினரால் மூன்று ஆசனங்களை பெற முடிந்ததே உண்மையான விடயம்.
வடகிழக்கில் தேசிய மக்கள் சக்தியினரை தமிழ் மக்களை நம்ப மாட்டார்கள் என்பது நன்கு தெரிந்த
நிலையில் வடகிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை அவர்களின் கோப்புக்களை விசாரணைக்கு எடுக்கப்
போகிறோம் என அச்சுறுத்தி தமது அரசியல் செயல்பாடுகளை செய்து வருகிறார்கள்.

வட மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறை கேடுகள் இடம் பெற்றமை ஆதாரத்துடன்
வெளிவந்த நிலையில் அதனை மூடி மறைத்து வலுக்கட்டாயமாக ஆசிரியர் இட மாற்றங்களை
மேற்கொள்வதற்கு இங்கு உள்ள ஊழல் அதிகாரிகளை பயன்படுத்துகிறார்கள்.
ஒரு ஆசிரியர் தனது ஆசிரியர் சேவையில் ஏற்கனவே கஷ்டப் பிரதேசம் ஒன்றில் சேவையாற்றிவிட்டு
தனக்கு விரும்பிய இடத்தில் பணி இடமாற்றம் பெற்ற போதும் அவர்களை மீண்டும் வெளி
மாவட்டங்களுக்கு அனுப்புகிறார்கள்.
அதுமட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றில் எமது கட்சியைச் சேர்ந்த பெண்
உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்த நிலையில் அவர்களுக்கான அதில்
உறுப்பினர்களை இதுவரை நியமிக்க தேர்தல் ஆணையம் கடிதம் தர மறுக்கிறது.

குறித்த உறுப்பினர்களுக்கான பதில் உறுப்பினர்களை நியமிப்பதற்கு எந்த ஒரு நீதிமன்றமும் தடை
ஏற்படுத்தவில்லை இவ்வாறான ஒரு நிலையில் யார் தடுப்பது இதற்கு பின்னால் ஊழல் அதிகாரிகள்
செயற்படுகிறார்கள்.
வடக்கில் தமிழ் மக்கள் சார்ந்த சபை ஒன்று திறம்பட இயங்கக்கூடாது என்ற ஜேவிபியின் இனவாத சிந்தனை தான் இதற்குப் பிரதான காரணம்.
தெற்கில் இடம் பெறும் நிலைமைகள் வேறு வட கிழக்கில் இடம்பெறும் நிலைமைகள் வேறு இதனை
தமிழ் மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆகவே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் வடகிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை கைது செய்து
சட்டத்தின் முன் நிறுத்தாமல் தம் வசம் வைத்துக் கொண்டு நிர்வாக விடையங்களை குழப்புவதும் பழி
வாங்குவதுமே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என மேலும் தெரிவித்தார்








