ஈரான் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த மேலதிக வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“நியூயோர்க் டைம்ஸ்” வெளியிட்ட தகவலின்படி, இந்த முடிவுக்கு பின்னணியாக அரசியல் காரணங்கள் அல்ல, மாறாக அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை கையிருப்பு குறைந்திருப்பதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் 1,200-க்கும் அதிகமான “பேட்ரியட்” (Patriot) இடைமறிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மேலும் ஒரு பெரிய இராணுவ மோதல் ஏற்பட்டால் அமெரிக்காவின் பாதுகாப்புத் திறன் பாதிக்கப்படக்கூடும் என பென்டகன் அதிகாரிகள் எச்சரித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஈரான் பதிலடி ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டால், ஜோர்டான், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் அங்கு பணியில் உள்ள வீரர்களையும் பாதுகாப்பதில் சவால்கள் உருவாகும் என அமெரிக்க கூட்டுப்படைத் தலைமையகம் கவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த நடவடிக்கை அமெரிக்கா தனது கொள்கையை முழுமையாக மாற்றியுள்ளதாக அர்த்தமல்ல என்றும், வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, ஈரானின் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகை (நேவல் பிளாக்கேட்) எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து அமலில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








