ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர், கூர்மையான ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதேச மக்கள் காவல்துறையினருக்கு வழங்கிய அவசரத் தகவலுக்கு அமைய, குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து இவ்வயோதிப தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்கள் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தம்பதியினராவர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த தம்பதியினரின் பிள்ளைகள் அனைவரும் கொழும்பில் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினர் நீண்டகாலமாகக் குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அண்மைக் காலமாக வியாபாரத்தை நிறுத்திவிட்டு, கடையை மூடிவிட்டு அந்த வர்த்தக நிலைய வளாகத்திற்குள்ளேயே தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பிலிருந்து பிள்ளைகள் தங்களது பெற்றோருக்குத் தொடர்ச்சியாகத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். எனினும், நீண்ட நேரமாகத் தொலைபேசி அழைப்புகளுக்குப் பெற்றோர் தரப்பிலிருந்து எவ்விதப் பதிலும் அளிக்கப்படாமையினால் சந்தேகமடைந்த பிள்ளைகள், உடனடியாக அருகில் வசிக்கும் அயலவர்களுக்குத் தொடர்பு கொண்டு நேரில் சென்று பார்க்குமாறு கோரியுள்ளனர்.
அதன்படியே அயலவர்கள் வர்த்தக நிலையத்திற்குச் சென்று பார்த்த போதே, தம்பதியினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யட்டுக் கிடந்தமை தெரியவந்துள்ளது.
மர்ம நபர்கள் எவரேனும் நள்ளிரவில் திருடும் நோக்கோடோ அல்லது தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்துடனோ இந்த வர்த்தக நிலையத்திற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்து, இக்கோரக் கொலையைச் செய்திருக்கலாம் என காவல்துறையினர் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இக்கோரச் சம்பவம் தொடர்பில் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சான்றுகளைச் சேகரித்து வரும் ஹட்டன் காவல்துறையினர், கொலையாளிகளை விரைவாகக் கைது செய்வதற்கான மேலதிகப் புலனாய்வு விசாரணைகளை அதிரடியாக முன்னெடுத்து வருகின்றனர்.








