அம்பாறை – நிந்தவூர் கலாசார மண்டபத்தின் புனர்நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிந்தவூர் பகுதிக்கு இன்று (23) விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இப்பகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி, மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பிராந்தியத்தின் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து, நிந்தவூர் பிரதேச சபை அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற விசேட நிகழ்வில், கலாசார மண்டபத்திற்கான புனர்நிர்மாணப் பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி, பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அமைச்சர் மஞ்சுள, திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல் பாசித், தாஹிர், உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றுகையில்,
“தமிழ், சிங்கள, முஸ்லிம், பௌத்த, பரங்கியர் (Burgher) என்ற எந்தவொரு வேறுபாடுகளுமின்றி, ஒரே நாட்டின் மக்களாக ஒன்றிணைந்து வாழும் புதிய அரசியல் பண்பாட்டை நாம் உருவாக்கியிருக்கிறோம். கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் இனவாதத்தை வளர்த்து அதன்மூலம் ஆட்சியை முன்னெடுத்தன. ஆனால், அந்தப் பின்தங்கிய இனவாத அரசியலை மக்கள் முழுமையாகத் தோற்கடித்து எங்களது அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இந்த நாட்டில் இனி இனவாத அரசியலுக்கு இடமளிக்கப் போவதில்லை.
நமது அரசாங்கம் எந்தவித இன அச்சமுமின்றி, பாதுகாப்பான மற்றும் ஒற்றுமைமிக்க ஆட்சியை முன்னெடுத்து வருகிறது. லஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத தூய்மையான நிர்வாகத்தை உருவாக்க மக்களே எங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர். நானும், எனது அமைச்சரவை அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களின் பணத்தில் ஒரு சதமேனும் வீண்விரயம் செய்யமாட்டோம் என இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களின் முன்னிலையில் உறுதியளிக்கிறேன்.
கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டன. அவற்றுக்கு எதிராகப் பேச முடியாத நிலை மக்களிடம் காணப்பட்டது. ஆனால், இன்று நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் கூட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர்; சிலர் நீதிமன்றங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுபோன்ற நிலைமைகள் அரிதானவை. எங்களது அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துகிறது. ஏழைகளுக்கு ஒரு சட்டம், அரசியல் அதிகாரம் உள்ளவர்களுக்குத் தனிச் சட்டம் என்ற நிலை இனி இருக்காது. சட்டம் அனைவருக்கும் சமமானது. நாட்டை முன்னோக்கிக் கட்டியெழுப்ப இதுவே அவசியமானது” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மிக ஆவேசமாகத் தெரிவித்தார்.
நிகழ்வின் நிறைவில், அங்கிருந்து மற்றுமொரு நிகழ்விற்குப் புறப்படுவதற்கு முன்னர், மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்களின் அருகில் சென்று ஜனாதிபதி தனது அன்பைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








