சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். “இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்; இனி எவ்வாறு கேட்பது என தெரியவில்லை” என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற சிறைக் கைதிகள் படுகொலை பொதுநாள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையர் தினத்தை முன்னிட்டு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டதாகக் கூறினார்.
அந்தச் சந்திப்பு வேறு நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், ஜனாதிபதியை நேரில் சந்தித்தபோது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு இரு கரம் கூப்பி கேட்டதாகவும், குறிப்பாக இலங்கையர் தினத்தை முன்னிட்டு அவர்களை விடுவித்தால் அது மகிழ்ச்சியளிக்கும் எனவும் வலியுறுத்தியதாக தெரிவித்தார். இருப்பினும் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை என்றார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உரையாற்றியுள்ளதோடு, ஜனாதிபதியை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது சிறைகளில் 10 தமிழ் அரசியல் கைதிகள் இருப்பதாகவும், அவர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணத்தை “குரலற்றவர்களின் குரல்” அமைப்பு தமக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி கேட்டுவிட்டேன். அதற்கு மேல் எவ்வாறு கேட்பது என எனக்குத் தெரியவில்லை,” என ரவிகரன் தனது கவலையை வெளிப்படுத்தினார்.








