வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் (பாதாள உலக) உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரைக் கைது செய்வதற்காகச் சர்வதேசச் சிவப்பு எச்சரிக்கைகள் (Red Notices) விடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நிஷாந்த சொய்சா, இன்று (23) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விபரங்களை வெளியிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சர்வதேசச் சிவப்பு எச்சரிக்கை மூலம் மாத்திரம் 35 சந்தேகநபர்களும், ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 33 பேரும் எனப் பெருமளவிலான குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, சர்வதேசப் பொலிஸாரின் (Interpol) ஒத்துழைப்புடன் தற்போது வரை இலங்கைக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகச் சுமார் 226 சிவப்பு எச்சரிக்கைகள் பெறப்பட்டு, நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 226 பேரில், சுமார் 90 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஆபத்தான குற்றவாளிகள் ஆவர். இவர்கள் தற்போது டுபாய், இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்து பதுங்கியிருப்பதை இலங்கைப் பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் சர்வதேச சட்டக் கட்டமைப்புகளுக்கு அமைவாக, மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ரீதியான நடவடிக்கைகள் தற்போதைய அரசினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என அவர் தெரிவித்தார்.








