அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரச நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகள், லஞ்சம் மற்றும் காணி ஆக்கிரமிப்பு விவகாரங்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“காசு உள்ளவர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டமா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு இனி இடமில்லை எனத் தெளிவாக தெரிவித்துள்ளார்.
கடலரிப்பு தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அட்டாளச்சேனை முதல் கல்முனை வரையிலான 16 கி.மீ கரையோரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணமாக 2010 காலத்தில் அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதை தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிவியல் அடிப்படையிலான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொத்துவில் பகுதியில் பொதுப் பூங்கா மற்றும் களப்பு நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் முன்னாள் அரசியல்வாதிகள் தொடர்புடையவர்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை சொந்தச் செலவில் மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆறுகம்பே சுற்றுலா வலயத்தில் உள்ள பல ஹோட்டல்கள் அரச அனுமதி இல்லாமல் அல்லது குறைந்த கட்டணத்தில் (permit lands) செயல்படுவதாகவும், இதனால் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மூன்று முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
1.காணி ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற விசேட அதிகாரக் குழு அமைக்கப்படும்
2.சட்டவிரோத மணல்/மண் நிரப்புதலைத் தடுப்பதற்காக விசேட அதிரடிப்படை (STF) ஈடுபடுத்தப்படும்
3.கரையோர பாதுகாப்பும் சுற்றுலா மேலாண்மையும் ஒருங்கிணைக்கும் புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும்
“கிழக்கின் கரையோரப் பகுதியை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியத்தால் அழிக்க விடமாட்டோம்” என ஜனாதிபதி இறுதியில் வலியுறுத்தினார்.








