ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து இரண்டாவது இரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸுக்கு வழங்கிய பேட்டியில், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் முன்னேறுவதற்காக ஜனாதிபதி ட்ரம்ப் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஆயுத இருப்பு குறைந்து வருவதால் தாக்குதல்களைத் தொடர்வது சவாலாக இருக்கும் என்ற தகவல்களை மைக் வால்ட்ஸ் மறுத்தார். தேவையான அனைத்து இராணுவத் திறன்களும் அமெரிக்கப் படையிடம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், அமெரிக்கத் தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரானிய இராணுவத் தரப்பும் தெரிவித்துள்ளது. சுமார் இரண்டு வாரங்களாக நீடித்த தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகளுக்குப் பின்னர் இந்த இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை தொடர்பான பதற்றத்தை குறைக்கும் நோக்கில் ஈரான் மற்றும் ஓமான் அதிகாரிகள் அண்மையில் தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான இந்த நீரிணையின் பாதுகாப்பு, சர்வதேச சந்தைகளின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
போர் காரணமாக எண்ணெய் விநியோகம் குறித்த அச்சம் அதிகரித்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அண்மையில் உயர்வைக் கண்டது. அதேவேளை, அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில் பெரும்பாலான மக்கள் இந்தப் போரின் நீடிப்பால் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை செவ்வாய்க்கிழமை (28) வெள்ளை மாளிகையில் சந்தித்து, மத்திய கிழக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








