ஈரானின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) மீது அமெரிக்கப் படைகள் நடத்திய வான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை கொடூரத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் திடீர் போர் பதற்றத்தைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் முற்றிலும் முறிவடைந்து, மீண்டும் ஒரு முழு அளவிலான போர்ச் சூழல் உருவாகியுள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் (3%) அதிகமான உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையைத் தீர்மானிக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) பீப்பாய் ஒன்றின் விலை, இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் 3.75 சதவீதம் அதிகரித்து, 97.8 அமெரிக்க டாலராகப் ($97.8) பதிவாகியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் இந்த அமெரிக்க – ஈரான் மோதலானது உலகளாவிய எரிசக்தி விநியோக வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஸ்தம்பிக்க வைத்துள்ளதால், வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடக்கக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள எந்தெந்த நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் இந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது என்பது குறித்த விபரங்களை ஈரானிய இராணுவம் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தவில்லை.
இருப்பினும், தங்களது வான் எல்லைக்குள் நுழைந்த ஈரானிய ஆஸில்லா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தங்களது நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தி, அமெரிக்கத் தளங்கள் மீதான சில தாக்குதல்களை முறியடித்துள்ளதாகக் குவைத் பாதுகாப்புப் படையினர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த விபரங்களை அமெரிக்க மத்திய கட்டளையகம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








